Tuesday 31 December 2013

Chapter 10 to 12

10-ம் அத்தியாயம்    -   விபூதி யோகம்

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

நெடுந்தோள் பார்த்தா!
அன்பு மனங்கொண்ட உனக்கு நிறைந்திருக்கும்
எதை மீண்டும் கூறுவேனோ உயரிய பொருள் கொண்ட
அதனைக் கேள்!
யாவற்றிலும், தேவர்க்கும், மாமுனிவர்க்கும்
ஆதி காரணம் ஆவேன் நானே!
யான் எடுக்கும் லீலா வினோதமான உற்பத்தியை,
அவதாரங்களை யாரும் அறியார்!
பிறப்பிறப்பற்றவன், தொன்மையானவன்,
பாரனைத்திலும் மேலான தலைவன் நானேயென
அறிவார் எவரோ, அத்தத்தத்துவ ஞானி
பாவங்கள் அனைத்தினின்றும் விடுபடுகிறார்!
எதையும் உறுதியாக்கும் திறன், மேலான அறிவு
ஆசையற்ற நிலை, பொறுமை 
என்றும் நிலை நிற்கும் உள்ளம், மனம், புலனடக்கம்,
இன்பம், இன்னல், தோன்றி மறைதல்
அச்சம், அச்சமின்மை, எவர்க்கும் தீங்கு நினையாமை,
சமநோக்கு, மகிழ்ச்சி, தவம், தானம், புகழ், பழி
இத்தனையும் அமைவது என்னிடமிருந்து தான், அறிக!
பாரினில் பிரஜைகள் அனைத்தையும் தோற்றுவித்த 
ஏழு முனிவர்கள்,
அதற்கு முந்தைய ஸனகர் முதலான நால்வர்
பத்தும் நான்குமான ஸ்வாயம்புவ மனுக்கள்
யாவரும் என்னாலேயே தோன்றியவர்!
என்னிடம் பேரன்பு கொண்டோர்கள்!
எனதான இறைத்தன்மையையும்
ஏற்றமிகு யோகச் சிறப்பதனையும்
எவனறிவானோ, அவனே குலையாத
அழியா பக்தி யோகியாகிறான், ஐயமின்றி!
பாரனைத்தும் தோன்ற காரணன் நானேயென்றும்
அவை இயங்குவது என்னாலேயே என்றும் 
பெரும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் எனை 
புரிந்து கொண்டோன், எவனோ அவன்
எனையே வழிபடுவான், இடையறாது!
அல்லும் பகலும் அனவரதமும் எனையே நினைத்து
உயிரனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்து
காலமெலாம் என் புகழ் பேசி மகிழ்வார்கள்
என் பக்தர்கள்!
என்னிடமே எப்பொழுதும் இன்புறுகிறார்கள்!
பேரன்புடன் தவத்தில் என்னிடம் ஈடுபடுவோர்க்கு 
பெருமை வாய்ந்த எனை அடையும் தத்துவ 
வடிவான
புத்தி யோகத்தை நான் அளிக்கிறேன்!
அந்த அன்பர்க்கு, நான் அவர் உள்ளத்தில்
நிலைத்து
அறியாமையினால் ஏற்படும் இருளதனை
ஒளி மிக்க தத்துவ ஞான விளக்கினால் 
அழிக்கின்றேன்!

அர்ஜூனன் உரைத்தார் -

கண்ணா! நீங்கள் புனிதமிக்க பரம்பொருளும்
பரமபதமும் ஆவீர்!
தேவரீர், என்றும் உள்ளவர், தேவ வடிவோன்
முழுமுதற் கடவுள், பிறப்பற்ற நிறைந்தவர்
தாங்கள் என கூறுகின்றனர், முனிவோர்!
தேவ ரிஷிகளும், நாரத முனிவர், அஸிதர்,
தேவலர், மாமுனி வியாஸர் யாவரும் அதையே
கூறுகின்றனர்! தாங்களும் அதையே பலமுறை
தெளிவுபடுத்தியுள்ளீர்கள், என்னிடம்!
கண்ணா! அனைத்தும் உண்மையே
தாங்கள் என்னிடம் கூறியவை!
ஆச்சரியமான தங்களது திருவிளையாடலால்
எடுத்த அவதாரங்களை தேவரும் அறியார்!
அசுரரும் அறியாரே!
உயிரினம் அனைத்தையும் உண்டாக்கி
தலைவனாய் அவர்க்கிருந்து
உயர் தேவர்க்கெல்லாம் தேவனாகி
மனிதரில் சிறந்தவரான
உங்களை நீங்களே அறியக்கூடியவர்!
தங்களின் சிறப்பினால் உலகனைத்தும்
பரவி நிற்கிறீர்கள்!
மங்களகரமான தங்களின் பெருமைகளை கூற
தாங்களே தான் தகுதியானவர்!
எப்போதும் தங்களையே சிந்தித்து
முழுதும் அறிவதெப்படி?
எந்தெந்த உருவினில் தங்களை
தியானம் செய்ய வேண்டும்?

ஐயனே! தங்களின் யோகத் திறனையும்
சிறப்புகளையும் மீண்டும் விரிவாக்குங்கள்!
அரிய அமுதமான தங்களது உரையில்
திருப்தி ஏற்படவில்லை யெனக்கு!
தொடர்ந்து கேட்க அவா!

ஐயன் உரைத்தார் -
குருகுலத்தின் மேன்மையானவனே!
இறைத்தன்மையுடையது என் சிறப்பனைத்தும்!
அதிலும்
சிறந்தவற்றை கூறுகின்றேன், கேள்!

அர்ஜுனா!

அனைத்து உயிரின் உள்ளங்களிலும்
ஆன்மாவாயுள்ளேன், நான்!
அவைக்கெல்லாம் ஆதி, இடை, முடிவென
நிற்கின்றேன், நானே!
அதிதியின் மக்களில் விஷ்ணு ஆவேன்!
ஒளிர்வதில் ஆதவன், ஆவேன்!
அதிவேக வாயு தேவரில் தேஜஸ் ஆவேன்!
உடுக்களில், அவற்றின் தலைவனான
சந்திரன் ஆவேன்!
மறைகளில் சாம வேதமாவேன்!
தேவர்களில் தேவேந்திரன் ஆவேன்!
புலன்களில் மனதாய் நிற்பேன்!
உணர்வாய் இருப்பேன் உயிரனைத்திலும்!
சக்திகளில் ஞான சக்தியாவேன்!
பதினோரு உருத்திரரில் நான் பரமேஸ்வரன்!
அரக்கர், யக்ஷரில் செல்வபதி குபேரன்!
இதன்றி அஷ்ட வசுக்களில் நான் அக்னி!
மேருவரையாவேன் சிகர மலைகளில்!
ஆசார்யருள் சிறந்த 'பிரஹஸ்பதி' நானே!
படைத் தலைமையிற் கந்தனாவேன்!
ஆழியாக உள்ளேன் நானே, நீர் நிலைகளுள்!
அறிவாய், அர்ஜுனா!
மற்றும் மாமுனிவரில் 'ப்ருகு' ஆவேன்!
சொல்லிற் சிறந்த ஓர் எழுத்து
'
ஓம்'காரமும் நானே!
மறையோர் வேள்விகளில் தவமாகிய
'
யஞ்ஞ'மும் நானே!
அசையா பொருளில் 'இமயமும்' நானே!
மரங்களில் நான் அரச மரம்!
சிறந்த தேவ முனிவரில் நான் நாரதன்!
கந்தர்வரில் நானே 'சித்ரரதன்'!
சித்தர்களில் 'கபில' முனிவன் நான்!

அமுதம் தோன்றலில் உடன் வந்த குதிரை
'
உச்சைஸ்ரவஸ்' நான்!
அதனுடன் வெளிப்பட்ட ஐராவதமும் நான்!
மானிடரில் பேரரசனும் நான், அறிந்து கொள்!
ஆயுதம் என்றால் அதில் வஜ்ராயுதம் நான்!
ஆவினத்தில் காமதேனு நான்!
அறவழி மகப்பேற்றுக்கு காரணன் 'அனங்க'னும் நானே!
பெரிய ஸர்பராஜன் 'வாசுகி'யும் நானே!
நாகங்களில் 'ஆதிசேஷன்' ஆவேன்!
நீர் வாழ்விற்கும், நீர் தேவர்க்கும் தலைவன்
வருணன் நானே!
நானே 'பித்ரு தேவதை'களுள் 'ஆர்யமா ஆவேன்!
அடக்கியாளும் யமனாகவும் உள்ளேன், அறிவாயே!
தைத்யர்களில் சிறந்த பிரஹலாதனாகவும்
காலம் காட்டும் காலனாகவும்
தைரியமிக்க விலங்காம் சிங்கமாகவும்
பறவைகளில் கருடனாகவும் உள்ளேன்!
தூய்மையாக்குதலில் சிறந்த காற்றாகவும்
ஆயுதம் எடுப்பதில் 'ஸ்ரீ ராமனாகவும்'
நீர் வாழ் இனங்களில் முதலையாகவும்
நதிகளிற் சிறந்த கங்கையாகவும் உள்ளேன்!

அர்ஜுனா!

படைப்பதில் துவக்கம், இடை, முடிவென
நானே உள்ளேன்!
அரிதான 'வித்யை'களில் ப்ரஹ்ம வித்யையாகிறேன்!
தர்க்கத்தில் உறுதியாகவும், தத்துவமாகவும் உள்ளேன்!
எழுத்தில் அகரமாகவும்,
தொகையில் உம்மைத் தொகையாகவும்
முதலும் முடிவுமில்லா
எக்காலத்திற்கும் காலமாகவும்
பல்முகங் கொண்ட 'விராட்' உருவமாகி
யாவதையும் பேணிக் காப்பவனாகவும் உள்ளேன்!
எல்லாவற்றின் அழிவிற்கும் தோற்றத்திற்கும் 
காரணமாகிறேன்!
வல்லமையுற்ற தேவியர்களில் - கீர்த்தி தேவி,
ஸ்ரீதேவி, வாக் தேவி, ஸ்ம்ருதி, மேதா,
திருதி, க்ஷமா ஆகிய தேவியரும் ஆவேன்!
கான வேதத்தில் ஸாமமாகவும்,
சந்தங்களில் காயத்ரியாகவும்,
காணும் மாதங்களில் மார்கழியாகவும்,
ஆறு பருவங்களில் வஸந்த ருதுவாகவும் ஆகிறேன்!
கொடியோரின் சூதாட்டத்தில் உறைவேன்!
திறமைக்கோர் திறமையாவேன்!
வெற்றி மகனின் வெற்றியாவேன்!
உறுதியின் உறுதியுமாவேன்!
ஸத்துக்களின் ஸத்வ குணமாவேன்!
உன்னுடைய நண்பனாகவும்,
'
விருஷ்ணி' குல வாஸுதேவனாகவும்
பாண்டவருள் அர்ஜுனனாகவும்
முனிவருள் வியாசராகவும்
கவிஞர்களுள் சுக்கிராச்சாரியார் ஆகவும் உள்ளேன்!
அடக்குவது, அடங்குவது என்ற சக்தியாவேன்!
வெற்றி பெறும் நியாய உணர்வும் நானே!
மறைத்துரைக்கும் தேவையில் மெளனமாவேன்!
ஞானியர் தத்துவ ஞானமும் நானே!
உயிரினம் தோன்ற காரணம் நானே!
நான் இன்றி இயங்கும் உயிரினம் ஏதுமில்லை!

பகைவரை வாட்டும் பார்த்தா!
எனது தெய்வீகப் பெருமைக்கு முடிவேதுமில்லை!
படர்ந்திருக்கும் எனது பெருமையின்
விரிவு கூட ஓரளவு தான் உனக்கு
சுருங்கச் சொன்னேன்!
சிறப்புடை பொருளனைத்தும்,
ஒளி படைத்த யாவும், சக்தி நிறை
பொருளதுவும் சீர்படு பகவானான
என்னுடைய ஒளியின் தோன்றலே, அறிக!

அர்ஜுனா!

இவையனைத்தையும் அறிந்து கொண்டதால்
பயன் என்ன உனக்கு?
யாவற்றையும் தாங்கிக் கொண்டிருப்பது
என் யோக சக்தி!

10-
ம் அத்தியாயம் நிறைவுற்றது

…………………………………………………………………………………

11-ம் அத்தியாயம்    விஸ்வரூப தரிசன யோகம்

அர்ஜுனன் கூறினார் -

மேலானதும் மறைத்துக் காக்கத் தக்கதும்
அரூப ஆன்ம ஞானம் கொண்டதுமான
காலமெலாம் போற்றும் உன் உபதேசம்
அழித்தது என் அஞ்ஞானத்தை!

தாமரைக் கண்ணா!

உயிரினம் அனைத்தும் தோன்றி லயமடையும்
விஷயங்கள் விரிவாக அறிந்தேன்!
அழிவற்ற அதன் பெருமையையும் அறிந்தேன்!

பரமனே தங்களைக் குறித்த விரிவான
விளக்கமும் அறிந்தேன்!
அப்படியே அது பரந்து நிற்க தங்களின்
மேன்மையான
பேருருவைக் காண மிகவும் விழைகின்றேன்!

பிரபுவே, யோகேஸ்வரா
பரந்த தங்களின் பேருருவை காண முடியுமானால்
நீங்காத, நிலையான தங்களது உருவை
எனக்குக் காட்டி அருள வேண்டும்!

ஸ்ரீ பகவான் சொன்னார் -

பல நிறம், பல உரு பலவிதமான
பரந்த தெய்வீக பேருருவை காண்பாயாக!
அர்ஜுனா! பரத குலத்தோனே!
அதிதியின் புதல்வர்கள், வஸுக்கள் எண்மர்,
ஆதித்தர்களான பன்னிருவர், உருத்திரர் பதினொன்று
அசுவனி குமாரர் இருவர், மருத்துக்கள் நாற்பத்தி ஒன்பது,

முன் பின் கண்டிராத மற்றும் மிகு பல
அதிசய உருவங்களையும் பார்ப்பாயாக!

உறக்கம் வென்றவனே!
அசைந்தும் அசையாததுமான உலகனைத்தையும்,
அரிதாக காண விரும்பும் யாவற்றையும் 
எழும்பும் என் உடலிலேயே, பார்!

ஊனக்கண்ணால் என் பேருருவைக் காண இயலாது!
உலகிற்கப்பாற்பட்ட இறைத் தன்மையான
பார்வையை தருகின்றேன், பார்ப்பாயாக!

ஸஞ்சயன் கூறினார் -
(
திருதிராஷ்டிரனை நோக்கி)

அரசே, பாவமனைத்தையும் போக்கும்
பரம யோகீஸ்வரன், கண்ணன்!
அருட் கண்ணை பார்த்தனுக்களித்து தன்
பேருருவைக் காண்பித்தார்!

முகங்களும் கண்களும் பல!
மேலான இறைத் தன்மையான அணிகள்!
அற்புதக் காட்சி! ஆயுதம் பல ஏந்திய கைகள்
அசத்தும் தெய்வீக மாலைகள்! ஆடைகள்!
மனம் பரப்பும் வாசனைப் பூச்சுகள்!
நினைத்தாலே சிலிர்க்கும் ஆச்சரிய உருவம்!
எல்லையற்ற எங்கும் முகங் கொண்ட
எழும் நெடும் பெரும் உருக் கொண்ட 
பரமனை கண்டானே பார்த்தன், அருட் கண்களில்!

பரந்து நெடிது நிற்கும் பரமனின் ஒளிமயத் தோற்றம்
பல்லாயிரம் பகலவர் உதயமாயினும் நிகராமோ,
அவ்வொளிக்கு?

பலவாக பிரிந்துள்ள உலகனைத்தையும் முழுமையாக
பகவான் கண்ணனின் திருமேனியிற்
பார்த்தான், பார்த்தன் ஒரேயிடத்தில்!
வியப்புடன் மெய்சிலிர்த்து ஒளிமிகு
விராட் உருவ பரமனை பக்தியும் நெகிழ்ச்சியுமாய்
தலை தாழ்ந்து வணங்கி கைகூப்பி பேசலுற்றான் அர்ச்சுனன்!

அர்ஜுனன் சொன்னார் -

இறைவனே! தேவர்களும், பலப் பல பிராணிகளும் 
விரித்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்
விரிந்த சடை மகாதேவனும், முனிவர் பலரும்
விரித்து படமெடுக்கும் தெய்வீக ஸர்ப்பங்களும்
இருக்கக் காண்கின்றேன்!
எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள், கால்கள்,
எண்ணற்ற உருவங்கள் யாவையையும்
எப்பக்கமும் பார்க்கின்றேன் உன்னுள்ளே! ஆனால்
அகிலாண்ட நாயகனே! முடிவான உன்னை
எங்கும் பார்க்கவில்லை!
நடுப்பகுதி, மேல், கீழ், துவக்கம், எதுவும் தெரியவில்லை!

கிரீடம் தரித்து, கதையும், சக்கரமும் கொண்டு
கொழுந்து விட்டு எரியும் அக்னி, சூரியனின்
ஒளியுடன் கூடி காணக் கூசும்
எங்கும் நிறைந்து நிற்கும் உன்னை
கணக்கிட இயலாத உருவம் உடையவராய் காண்கின்றேன்!

அனைத்துலகிற்கும் மேலான உறைவிடம் நீங்கள்!
அழிவற்ற பரமன்! நிலையான அறங்காக்கும் இறைவன்!
திறன் எல்லையற்று கொண்டு
முதல், நடு, முடிவற்ற பரமன்!
தோள்கள் பல! சந்திர சூரியர்கள் உங்கள் கண்கள்!
தகிக்கும் தீயென வாயுடன் தங்களை
உலகை வாட்டுபவனாகவும் காண்கின்றேன்!

விண்ணிற்கும், மண்ணிற்கும் இதன் இடையிலும்
எத்திசையிலும் நீங்களே நிறைந்திருக்கும்
உலகிற்கப்பாற்பட்ட நின் அச்சம் தரும் உருக்கண்டு
மூவுலகும் நடுங்குதே, அஞ்சி!

தேவரெலாம் கூடி நின்னிடம் சேருகின்றனர்!
தீரா அச்சத்துடன் கைகூப்பி சிலர் பாடுகின்றனர் உனை!
துறவோரும் சித்தரும் கூடி மங்களம் கூறி
சிறந்த கருத்துடை துதிகளாற் போற்றுகின்றனர்!

பதினொரு உருத்திரர்கள், ஸாத்யர்கள், விஸ்வே தேவர்கள்,
பணிரெண்டு ஆதித்யர்கள், இரண்டு அசுவனி குமாரர்கள்,
நாற்பத்தொன்பது மருத்துக்கள், கந்தர்வர்,
பித்ருக்களின் கூட்டம், அக்ஷர், அசுரர், ஸித்தர்கள் யாவருமே
பரவசமாக ஆச்சரியம் மிகுந்து பார்க்கின்றனர், உங்களை!
நீண்ட தோளுடையோனே!

முகங்கள் பல, கண்களும் கைகளும் பல,
மிளிரும் தொடைகள், திருவடிகள், வயிறுகள்
மிக பயங்கர கோரப் பற்கள் பல!
மிக மகத்தான இவையனைத்தையும் கண்டு
மாந்தர் அனைவரும், அடியேனும் இடையறாது
மிக மிக பயந்து நிற்கின்றோம், நடுங்கியவாரே!

பரமனே, வானளாவி, ஒளி மிகுந்து
வண்ணம் பல கொண்டு, விரித்த வாயுடனும்
ஒளி மிகு கால்களுடனும் அச்சுறுத்துவதேன் என்னை!
அமைதியற்று துணிவின்றி வாடுகின்றேன், இதனால்!

அச்சுறுத்தும் கோரைப் பற்கள், ஊழிக்கால
தீ போன்ற முகங்கள்,
இவை பார்த்து திசையறியாது தவிக்கின்றேன்!
இதனினும் பயங்கலந்த சுகம் வேறுண்டோ?
இக பரங்களை காக்கும் இறைவா நீ அருள வேண்டும்!

கெளரவ கூட்டங்கள் அரசர்களோடு தங்களிடம் 
புகுகிறார்கள்!
பாட்டனார் பீஷ்மரும், துரோணரும் கர்ணனோடு கூட
நம்மைச் சார்ந்த முக்கியமான போர் வீரர்களுடன்
கொடுமையும் பயங்கரமும் கொண்ட கோரைப்-
பற்களை கொண்ட
தங்களின் வாய்களில் வேகமாக ஓடி வந்து நுழைகின்றனர்!
தலைகள் சிதறி சிலர் தங்களின் பல்
இடுக்குகளில் சிக்கி இருக்கிறார்கள்!

நதிகள் விரைவாக ஓடி கடலைச் சேர்ந்து மறைவது போல்
நில உலக இந்த வீரர்கள் தீ கக்கும் தங்கள்
வாய்களில் மறைகின்றனர்!
தாமழிய வேகமாய் ஓடி வந்து தீயில் விழும் விட்டிலென
தரணி மக்கள் தங்கள் அழிவிற்காக ஓடி வந்து
நுழைகின்றனர், உங்கள் வாயில்!

அனைத்துலகையும் தீ கக்கும் உங்கள் வாயினால்
விழுங்கியும்
அங்குமிங்குமாக நாவினால் துழாவவும் செய்கிறீர்கள்!
அச்சமிகு உங்கள் உடல் ஒளி உலகினை
வெப்பத்தால் வாட்டுகின்றது!

தேவரில் மேலோரே!
அச்சுறுத்தும் வடிவுள்ள தாங்கள் யார்?
அருள் கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள்!
ஆதியாய் நிற்கும் தங்களை அறிய விரும்புகின்றேன்!
அதிசயமான உங்கள் செயல் புரியாதது!

ஸ்ரீ பகவான் உரைத்தார் -

உலகம் யாவையும் அழிக்கும் மஹாகாலன் நான்!
உலகை அழிக்க முனைந்து விட்டேன்!
நீ போர் செய்யாவிடினும் எதிரிகள் இருப்பாரில்லை!
நீக்கமற யாவரும் போரில் அழிந்துபடுவர்!

எழு! பகைவரை வென்று அரசினை ஏற்று புகழ் படைத்திடு!
எதிரிகள் யாவரும் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர்!
இடது கையாலும் அம்பெய்தும் பார்த்தனே
இருந்து விடு நீ வெறும் காரணமாய் மட்டும்!

துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும்
துணிந்து போர்களம் புகுந்து முன்பே என்னால் கொல்லப்பட்ட
வீரர் யாவரையும் அச்சமின்றி கொன்றுவிடு!
வெற்றி உனக்கே! ஐயமேதுமில்லை! போரிடுக!

ஸஞ்சயன் கூறினார் -

கண்ணனின் உரை கேட்டு நெகிழ்ந்த அர்ஜுனன்
கைகூப்பி, மெய் நடுங்க, திரும்பத் திரும்ப வணங்கி
குரல் தழுதழுத்து பேசுகிறார் அவரை நோக்கி!

அர்ஜுனன் சொன்னது -

எங்கும் நிறை இறைவா, தங்களின் பெயர், குணம்,
எழுச்சியை பாடுவதாலேயே ஞாலம் மகிழ்கிறது.
அச்சத்தால் அரக்கர்கள் எத்திசையும் ஓடுகின்றனர்!
அரிய சித்தர்கள் கூட்டம் கூட்டமாய் வனங்குகின்றனர்!

இதுவெல்லாம் நியதியே அன்றோ?
நான்முகனையே படைத்த தங்களை யார்தான் வணங்கார்!
முடிவற்ற, ஞாலம் முழுதும் நிறைந்த தேவரீர்
நீங்களே சத், சித், ஆனந்த பரமனே யாவீர்!

புவிதனில் சிறப்பிடம் கொண்ட 
முழு முதற் கடவுள் நீங்கள்!
பாரனைத்தும் நிறைந்திருக்கும் நீங்களே
பரமபதமாக அறிய, அறியப்படுபவர் யாவீர்!

வாயு, கொடுங்கூற்று, அக்னி, வருணன்,
வான்மதி, படைப்புத் தலைவன் பிரமன், அவர்தம் தந்தை 
யாவரும் நீங்களன்றோ!
ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் - தங்களுக்கு
திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்!

அனைத்து வடிவம் கொண்ட திறம் நிறை இறைவா
அடியேன் முன்னிருந்தும் பின்னிருந்தும் வணங்குகின்றேன்!
அனைத்து திக்கனைத்தினின்றும் வணங்குகின்றேன்!

உன் பெருமை அறியாது உன்னை தோழனென்றெண்ணி
உன் மேலுள்ள பேரன்பினாலோ, அசட்டையினாலோ
கிருஷ்ணா, யாதவ, நண்பாவென்று எத்தையோ முறை
ஒருமையிலே, துடுக்குத்தனமாய் பேசியுள்ளேன்!
உறங்கும் நேரத்தில், உற்சாகத்திலும், பக்கத்திலே
அமரும் போதும்
உண்ணும் போதும், உங்களின் தனிமையிலும்
நண்பர்களோடு இருக்கும் போதும்
வேடிக்கையாகவும், கேலியாகவும் அவ்வப்போது பேசி
வேணது அவமதித்துள்ளேன்!
வேண்டுகிறேன், கண்ணா உன்னை! பேரன்பு கொண்டு
பொறுத்தருள வேண்டும் அத்தனையும்!
முன்னே நான் காணாதாகிய உருவைக் கண்டு மகிழ்ந்தாலும்
மனமோ, மெத்த அச்சுறுகிறது, இறைவா!
நான்கு கைகளோடு கூடிய விஷ்ணு உருவையே
எனக்குக் காட்டி, திருவருள் புரியுங்கள்!

கதை, சக்கரம் கரங்கொண்டு கிரீடம் தரித்த உருவை
கண்ணா, தரிசிக்க விழைகின்றேன்!
விசுவ உருவைக் கொண்டவரே!
நான்கு கரங்கள் கொண்ட உங்கள் உருவை
எனக்கு காட்டருள வேண்டும்!

ஸ்ரீ பகவான் உரைத்தார்!

அர்ஜுனா! 

அருளுடனும் அன்புடனும் என் யோக சக்தியினால்
முதலும் முடிவுமற்ற ஒளி மிக்க என்

பேருருவைக் கண்டாய்! உனையன்றி
வேறெவரும் இவ்வுருவைக் கண்டதில்லை!

பார்த்தனே, என் பேருருவை காண இயலாது
இம்மண்பதையில் யாராலும்!
மறையனைத்தும், வேள்விச் செயற்முறை 
யாதும் கற்றாலும்
அறச்செயல்கள் மற்றும் ஈகையினாலும்
காணக் கிடைக்காதவன், நான்!
இவ்வுருவை காண இயலாது
தீவிர தவத்தினாலும் கூட!

மதி மயங்கி கலங்காதே - அச்சுறுத்தும்
என் பேருருவைக் கண்டு!
சங்கு, சக்ரம், கதை, பத்மம் ஏந்திய
நான்கு கரங்களுடன் கூடிய என் உருவையே
மறுபடியும் பார்த்து மகிழ்வாயாக!

ஸஞ்சயன் கூறினார் -

கண்ணன் பார்த்தனிடம் கூறியவாறு
கைகள் நான்கு கொண்ட விஷ்ணுவின் உருவைக் காட்டி
மீண்டும் இனிய வடிவு கொண்டார்!
அச்சம் தவிர்த்தான் அர்ஜுனன் இவ்வுரு கண்டு!

அர்ஜுனன் உரைத்தார் -

கண்ணா! இயல் நிலைக்கு வந்துற்றேன்
நின் இனிய மானிட உருக் கண்டு!

ஸ்ரீ பகவான் உரைத்தார்!

நான்கு கைகளுடைய என் உரு காண்பது அரிது
யாவர்க்கும்!
என்றும் தேவர்கள் பெரு விருப்பம் கொண்டுள்ளனர்
இவ்வுருவில்!
நீ பார்க்கும் சதுர்புஜ உரு மறையோராலும்
காணப்படாதது!
நீண்ட தவத்தினாலும், தானத்தினாலும்
வேள்வியினாலும் கூட காண இயலாதது!

பகைவரை வாடுபவனே!
வேறெந்த வெளியுலகு பயனும் கருதா பக்தியினால்
சிறந்த இந்த நான்கு கை உருவைக் காணமுடியும்!
தத்துவ ரீதியாய் அறியப்பட்டு ஒன்றிடும்
நேச பாவத்தால் சேர்ந்திட முடியும், என்னிடம்!

எனக்காகவே செயலனைத்தும் செய்பவன் எவனோ,
தனக்கு மேலான கதியென எனையே கொள்பவன் எவனோ,
தன்னிகரில்லா பக்தியை என்னிடம் கொண்டவன் எவனோ,
என்றும் எதிலும் பற்றற்று உயிரனைத்தையும்
நேசிப்பவன் எவனோ,
அவனே, எனை அடைகின்றான்!

11-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
…………………………………………………………………………………………

12-ம் அத்தியாயம்      பக்தி யோகம்

அர்ஜுனன் கூறினார் -

எதனிலும் நாட்டமின்றி, அன்புடன் உங்களை வந்தித்து
உயர் நிலையான சகுண உருவில் உங்களை வழிபடுவோர்,
மற்றும்
அழிவற்ற சத், சித், ஆனந்த உருவற்ற பிரம்மத்தை
உயர் நிலையிற் வழிபடுவோர் -
இவ்விரு பக்தர்களில் சிறப்புமிகு யோகம் அறிந்தவர் யார்?

ஸ்ரீ பகவான் சொன்னார் -

மனம் ஒன்றி எப்பொழுதும் எனை வழிபடுதல்,
தியானம் செய்து கருத்துடன் சகுண உருவாக
எனை வழிபடுதல் -
அவர்கள் யோகியர்களில் மேலானவராக என்னால்
போற்றப்படுவர்!

புலனடக்கி, மனம் புத்திக்கு அப்பாற் நின்று
சொற்களால் விளக்க இயலாத
எங்கும் நிறைந்த உருவே எனதென்று திடமாக நம்பி
நிலையாக, நிரந்தரமான அசையாமற்
இயக்கமற்று, உருவமற்று, அழிவற்று
இருக்கும் சத், சித், ஆனந்த, பரமனான எனை
ஒன்றி வழிபடும், உயிரனைத்தையும் நேசித்து
சம நோக்குடைய யோகியர் எனையே அடைவர்
உறுதியாக!

சத், சித், ஆனந்த உருவில் திளைத்தோர்,
சாதனையில் உழைப்பு மிகும்!
எத் திறத்திலும் மெய் பற்றுடையோர்
பிரம்மத்தை அறிவது மிகவும் கடினம்!
எனையே என்றும் என் நிலையிலும்
ஸகுன உருவாகிய எனை
சரண் எனக் கொண்டோர்,
காதலால் கசிந்துருகி பக்தி செய்வோர்
மரண பயங்கொண்ட சம்சாரக்
கடலினின்றும், கரையேறுவர், விரைவில்!

மனதையும் புத்தியையும் நிலைநிறுத்தி ஈடுபடு!
என்னிடமே வாழ்வாய் என்றும், ஐயமில்லை!

அர்ஜுனா! மனம் ஒரு நிலைபட இயலாவிடில்
இறைவன் புகழ் பாடி, அவன் திருப் பெயர் ஓதி
அடையவிரும்பு, எனையே!
யோகப் பயிற்சி எதனினும் திறனற்று இருந்தாலும்
என் பொருட்டே செயலாற்றினால்
எனையே அடையும் பேராவலை பெறலாம்!

பயிற்சி யோகம் கூட செய்ய திறனற்றிருந்தால்
புத்தி, மனம் இவற்றை வென்று செயற்பயனை 
துறந்துவிடு!
எனை அடையச் செயும் பொருளறியா பயிற்சியினும்
அனேக சாத்திர அறிவே சிறந்தது!
இதையும் விட என்னுருவை தியானிப்பது சிறப்பு!
யாவற்றையும் விட செயற்பயன் துறப்பது
சாலச் சிறந்தது!
ஏற்றமிகு இத் தியாகத்தால் உரிய அமைதி
கிடைக்கிறது!

உயிரனைத்திலும் வெறுப்பேதும் இல்லாதார்
உயர்ந்த, தன்னலமற்ற அன்புடையோர்
பயன் கருதாது, காரணமேதுமின்றி பரிவு காட்டுவோர்
நான், எனது என்ற செறுக்கேதும் அற்றவர்,
இன்ப துன்பங்களில் சம நோக்குடையோர்
இன்னா செய்தார்க்கும் இனியவையே செய்வோர்
எந் நிலையிலும் பொறுமை காப்போர், யோகியர்,
மன நிறைவுடையோர், புலனடக்கம் கொண்டோர்
உறுதி மிகு நம்பிக்கையில் மனம் புத்தியை
என்னிடம் சாற்றுவோர் -
இவரெலாம் எனக்கு பிரியமான பக்தர்கள்!

வெளியேயிருந்து பாதிப்படையாத ஜீவன் யாரோ,
வெறெந்த ஜீவன் மூலமும் பாதிப்படையாதார் யாரோ,
மகிழ்ச்சி, பொருமை, பயம், பாதிப்பு
இவையினின்றும் விடுபடுபவர் யாரோ,
எனக்குப் பிரியமானவர், அவரே!

அகம் புறம் தூய்மை கொண்டு, எதிர்பார்ப்பு ஏதுமின்றி
பாதகமற்ற பிறவிப்பயனை அறிந்தோர்
எதனினும் விருப்பு வெறுப்பற்றோர்,
தானெனும் அகந்தை அற்றோர் -
நான் விரும்பும் பக்தர் அவரே!
என் அன்புக்குரியோரும், அவரே!

பகை, நட்பு, மதிப்பு, அவமதிப்பு
தட்ப வெப்பம், இன்ப துன்பம் ஆகிய இரட்டைகளிற்
பற்றற்ற சம புத்தியுடையோனும், என் பக்தனே!
இகழ்ச்சி, புகழ்ச்சியில் சம நோக்கு
இறைவனை எந்நேரமும் சிந்தித்தல்
எவ்வகையிலும் உடற் பேணுதலில் மகிழ்ச்சி
வசிக்கும் இடம் தனது என்ற பற்றறுத்து இருத்தல்
நிலையான பக்தியில் திளைத்தல்
இக்குணமுடையோரே, என் அன்புக்குரியவர்!

அசையாத நம்பிக்கையில் எனையே கதியாகக் 
கொண்டோர்,
அமுதமிகு, தருமமேயான நான் விளித்த
குணங்களை
பயன் கருதா நிலையிற் அனுஷ்டிப்போர் -
இவரே, நான் விரும்பும் பெரும் பக்தர் ஆவாரே!

12-
ம் அத்தியாயம் நிறைவுற்றது
.....................................................................................




No comments:

Post a Comment